சுற்றுச் சூழலைக் காப்போம்

ஒன்பது கோள்களும் ஒன்றான “பூமி” அண்ட வெளியில் மிதந்து கொண்டிருக்கிறது. மற்ற எந்த கோள்களுக்கும் இல்லாத பலசிறப்பு அம்சங்களை குறிப்பாக உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற அற்புதமான சூழலைப் பெற்றுள்ளது. ஆனால் பூமியின் நலமும், வளமும், சூழலும் குன்றிக் கொண்டே இருக்கின்றது. வளிமண்டலத்தில் காற்று, நீர், நிலம் மாசு காரணமாக உயிரினங்கள் அனைத்தும் தாமாகவே அழியும் நிலை உருவாகியுள்ளது. வானிலை மாற்றத்தினால் வெப்பம் அதிகரித்துள்ளது. சோலை வனங்கள் அனைத்தும் பாலைவனங்களாக மாறியுள்ளன. கோடிக்கணக்கான உயிரினங்களில் ஓர் உயிரினம் தான் மனிதன். இம் மனிதன் பூமியில் மற்றும் வளிமண்டலத்தில் கிடைக்கக் கூடிய இயற்கைப் பொருட்களை கைவசப்படுத்திவிட்டான். மனிதன் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு 90 விழுக்காடுக்குமேல் தன்னைச் சார்ந்த இயற்கைச் செல்வத்தை அழித்து விட்டான். மனிதன் செய்த அனைத்து இயற்கை அழிவுகளும் சமன்படுத்தப்படவேண்டும்.

‘பாரதநாடு பழம் பெரும் நாடு’ என்ற புகழுக்கேற்ப நம் நாடு பழமை வாய்ந்த நாடு. நமது பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவையே இதற்குத் தக்க சான்று. நமது இந்தியத் துணைக் கண்டம் உருவாகி பல கோடிக்கணக்கான வருடங்கள் ஆகின்றன. இவ்வாறு பழமை வாய்ந்த, இயற்கை வளம் நிறைந்த நம் இந்திய நாட்டில் தான் சூழல் சீர்கேடுகள் நிறைய இருக்கின்றன. தொழிற்புரட்சி என்கிற பெயரில் இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன. மனித சமூகமின்றி இயற்கை தனித்து வாழும். ஆனால் இயற்கையின்றி மனித சமூகம் வாழ முடியாது.

உலக வெப்பமயமாதலால் ஏற்பட்டு வரும் இயற்கை ஆபத்துகளுக்கு, முப்பது கோடி பேர் உடல்நிலை அவதி உட்பட பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நவீன வீட்டு உபயோகச் சாதனங்களால் கரியமில வாயு நிறைய வெளிப்படுகிறது. இதனால் பூமி சூடாகி வானிலை மாற்றமும் சூழல் மாற்றங்களும் ஏற்படுகின்றன.

ஆண்டு ஒன்றுக்கு 800 கோடி டன் வளமான மண் கடலிலே கரைந்து வீணாகின்றது. கால வெள்ளத்தில் பாறைகள் பொடிந்து, பொடிந்து மண் மலர்ந்தது, இம்மண் மலர்ச்சிக்கு அணை போட்டால், மண்ணாக மாறும் செயல் தடைபடும். உருவான மண் கரைந்து வெளியேறும். நிலமானது நிலைத்து நிற்குமே தவிர வளமான மண் இராது. நவீன வேளாண்முறைகளால், விவசாயத்திற்கு ஆதாரமான நிலம், நீர் மற்றும் இடு பொருட்களான உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள், புது இரக விதைகள் இவற்றால் மண் வளம் குன்றிவிட்டது. மண் அரிப்பு, உவர்ப்பு, களர் ஆதல் போன்ற பல வழிகளில் மண்ணின் இயல்பான தன்மையில் மாறுபாடுகள் பல ஏற்பட்டுள்ளன. இன்றைய நகர் மயமாதல், தொழில் நுட்பம் போன்ற இவற்றால்

ஆண்டிற்குச் சராசரியாக 0.8 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காடு நிலப்பரப்பை நிரந்திரமாக நாம் இழந்து வருகின்றோம்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் நாள் ‘உலக பூமி நாள்’ கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்று ‘உலகளவில் நினை உனதளவில் செயல்படு’ (Think Globally Act Globally) என்ற கூர் வார்த்தைக்கேற்ப ஒவ்வொருவரும் செயல்பட்டால் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை பூமியிலிருந்து நம்மால் விரட்ட இயலும். நமது சுற்றுப் புறங்களில் வீணான காகிதங்களை மறு சுழற்சிக்கு அனுப்ப உதவ வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக சுற்றுச் சூழலுக்கு இணைந்த பொருட்களை உற்பத்தி செய்ய வலியுறுத்த வேண்டும். கடைகளுக்குப் பொருட்கள் வாங்கச் செல்லும்போது துணிப்பைகள், சணலால் ஆன பைகன், உலோகப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். பிளாஸ்டிக் அபாயத்தை மற்றவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.

‘அன்னை பூமி, நமக்கென்ன செய்தது என்று கேட்காதே

அன்னை பூமிக்கு நாம் என்ன செய்தோம் என்று கேள்’.

என்கிறார் அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான் எப்.கென்னடி. நாம் வாழும் இந்த செழுமையான பூமியை பிறர் (நமது சந்ததியினர்) வாழ சிறப்பான இடமாக விட்டுச் செல்ல வேண்டும்.

மனவுறுதியும், சேவை மனப்பான்மையும் நிரம்ப பெற்ற நாம் நம்முடைய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் இணைந்து இப்பூமியின் சுற்றுச் சூழல் நலம் காக்க ‘இயற்கை சக்தி’களை நாம் மாசு படுத்தக் கூடாது. இயற்கையும், சுற்றுச் சூழலையும் பாதுகாப்பது நமது பொறுப்பும், கடமையுமென உணர்ந்து நாம் சுற்றுச் சூழல் காக்க மரம் நடுதலை நம்மூர்களில் உள்ள மக்களுக்கு ஊக்குவித்து மரம் நடுதல் பணியை நாமும் மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக்கினால் ஆன பைகளை (நெகிழிப்பைகள்) முடிந்தவரை உபயோனப் படுத்தாமல் இருத்தல் வேண்டும். நம் வாழ்க்கையில் மேற்கூறியவற்றை செயல்படுத்துவதன் மூலம் நம் எதிர்கால சந்ததியினருக்கு முழுமையாக பயன்படும் வகையில் இந்த பூமியை மாற்றி அமைக்கலாம். நாம் வாழும் இந்த பூமியை வாழ விடலாம். நம்முடைய அடுத்த தலைமுறைக்கு அழகிய உலகினை விட்டுச் செல்லாலம்.

எம்.சி.குமார் எம்.ஏ., எம்.ஃபில், பி.எட்.,
விரகாலூர்

உலக வெப்பமாதலைத் தடுப்போம் ! (Global Warming Awareness)

மக்களே விழித்தெழுங்கள் ! புவி வெப்பமயமாதலை தடுங்கள் !!

இயற்கை சூழல் மாற்றத்தினால் நம் நாடு அதிக அளவில் பாதிக்கப்படும்.

இயற்கை மாற்றத்திற்கான காரணங்கள்

  • வளிமண்டல வாயுக்கள்
  • தொழிற்சாலை மற்றும் அணுமின் நிலைய கழிவுகள்
  • பெருகி வரும் மக்கள் தொகை
  • நிலக்கரி உலைகள், எரிசக்தி, எண்ணெய் உலைகள்
  • வாகன உற்பத்தி பெருக்கம்

இயற்கை சீர்கேடுகள் :

  • சூறாவளி
  • வெள்ளம், பஞ்சம்
  • ஓசோன் ஓட்டை
  • பனிப்பாறை உருகுதல்
  • கடல் நீர் மட்டம் உயர்வு
  • கோடை மழை குறைவு
  • கரியமில வாயு அதிகரிப்பு

வெப்பமயமாதல்

  • விவசாய பாதிப்பு
  • நீர் நிலைகளில் தண்ணீர் குறையும்
  • காடுகள் அழியும், விலங்குகள் பாதிக்கும்.
  • மழை குறையும், தொடர் விவசாயம் செய்ய முடியாது.
  • ஏழ்மையை உண்டாக்கும்.
  • சமுதாய சீர்கேடுகள் உண்டாகும்
  • புற்றுநோய், சரும வியாதிகள்,
  • கண் வியாதிகள் தோன்றும்.
  • அலர்ஜி, ஆஸ்துமா உண்டாகும்.
  • எதிர்காலம் பற்றி கேள்விக்குறியாக உள்ளது.
  • சத்தான உணவு தட்டுப்பாடு ஏற்படும்.
  • உழைப்பாளர் வர்க்கம் பாதிக்கப்படும்

தடுப்பு முறைகள் :

  • சூரிய ஒளி வெப்பத்தை சக்தியாக மாற்றுதல்
  • குளிரூட்டியை மிதமாக உபயோகப்படுத்துதல்
  • துணிப்பை பயன்பாட்டினை கையாளுதல்
  • நாகரீகம் என்ற பெயரில் இயற்கையை கெடுக்க வேண்டாம்
  • USE CFLs intead of Bulbs
  • மரம் நடுதல்

செய்யப்பட வேண்டியவைகள்:

  • Drive Less
  • Switch off : mobile Charger, computer if not used
  • குழல் பல்பை பயன்படுத்துவோம்
  • வாஷிங் மெஷினில் ஒரே நேரத்தில் துணியை துவைத்தெடுப்போம்.
  • கொடி கயிற்றில் துணியை உலர்த்துவோம்.
  • பொதுத்துறை பேருந்துகளில் பயணிப்போம்

சிறப்பு பொருளாதார மண்டலம்

தாராள மயமாக்கல், சந்தை மயமாக்கல் ஆகியவற்றின் வழியாக உலகமயமாக்கல் என்ற உருவம் இன்று உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த உலக மய பொருளாதாரம் இன்று பல நவீன சுரண்டல் வடிவங்களை தொடர்ச்சியாக வழங்கி கொண்டுள்ளது. அதன் தற்போதைய வடிவம்தான் சிறப்பு பொருளதார மண்டலம் எனலாம்.

சித்தரிப்பு :
“இன்னொரு உலகம் சாத்தியம்” என்று போராடி வரும் வேளையில் உலகமயமும் அதன் இயல்பில் சிறப்பு பொருளாதார மண்டலத்தினை ‘புதியதோர் உலகமாக’ சித்தரித்து கொண்டுள்ளது.

இந்த பொருளாதார மண்டலம் யாருடைய நலனுக்காக ? இதனால் பாதிக்கப்படும் வர்க்கம் எது ? இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த போகிறது ? என ஆயிரம் ஆயிரம் கேள்விகள் உண்மையான சமூக ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு வருகின்றது.

இந்திய நிலை :
2005 நவம்பர் மாதம் மாண்புமிகு பாரத பிரதமரால் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் ! இதன் முக்கிய நோக்கமாக கூறப்படுவது என்னவென்றால் “நேரடி அந்நிய மூலதனத்தை ஈர்ப்பது ; அதற்கான சர்வதேச அளவில் மண்டலங்களை அமைப்பது” என கூறப்படுகிறது மேலும் “வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேலை வாய்ப்புகளை உருவாக்குவது” என ஆசையாயும் கூறுகின்றது.

இதற்காக நமது மத்திய அரசின் வர்த்தக துறை 181 மண்டலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் 128 நிறுவனங்கள் அனுமதிக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளது. இந்திய அளவில் 304 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கவும் அரசு அசுர வேகத்தில் திட்டம் தீட்டியுள்ளது.

பங்குதாரர்கள் :
அரசினால் உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தினை அமைக்கப் போவது யார் ? வேறு யாருமல்ல நமது பங்காளிகள் ! ரிலையன்ஸ், டாடா, சஹாரா, யுனிடெக், வீடியோகான், மகிந்திரா, கல்யாணி குழுமம் போன்ற நிறுவனங்கள்தான் !

ஏரி நிறைந்தால் கரை கசியும்

இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் முதல் 35 ஆயிரம் ஏக்கர் நிலம் வரை நிலம் கையகப்படுத்தலாம் என்ற செய்தியும் நம்மைப் போன்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் செய்திகளாய் அமைகின்றது. மும்பையில் ரிலையன்நிறுவனம் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இம்மண்டலத்தை அமைத்துள்ளது. இதுதான் இந்தியாவிலேயே மிகப்பெரியது என கூறப்படுகின்றது.

“இந்தியாவின் ஆத்மா கிராமங்களில் வாழ்கிறது. இந்தியா பல லட்சம் கிராமங்களை உள்ளடக்கியது” என்றார் மகாத்மா காந்தி அவரது வழி வந்தவர்கள் அவரது சிந்தனைக்கு சமாதி கட்டிக் கொண்டு வருகின்றனர். நன்செய் நிலம் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு நிலக்கொள்ளை இச்சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இம்மண்டலத்தினால் நகர நெருக்கடி ஏற்பட்டு சமூக பதட்டமும் உருவாகின்றது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் இது பற்றி கூறும்போது, “மக்களை ஆயுதம் ஏந்துவதற்கு தள்ளி விடாதீர்கள்” என்றார்.

உணவு பற்றாக்குறை :
ஆம் ! இது வரை இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 67 சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக ஒரு லட்சத்து 34 ஆயிரம் யஹக்டேர் நிலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்து 74 ஆயிரம் யஹக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவிற்கு பிறகு இவ்வளவு பெரிய நிலக்கொள்ளை நடப்பது இது தான் முதல் முறை என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு கடும் பஞ்சம் ஏற்படும் சூழல் உள்ளது.

இச்சிறப்பு பொருளாதார மண்டலம் ஆசீர்வதிக்கப்பட்ட நவீன காலனியாதிக்கமாக செயல்பட்டு வருகின்றது.

ஏகாதிபத்ய தாராளம் :

  • இம்மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதி நோக்கத்திற்காக மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. 
  • இப்பொருட்களுக்கு பூரண வரி விலக்கு அளிக்கப்படுகின்றது. 
  • முதல் 5 ஆண்டுகளுக்கு உற்பத்தி வரி, ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, விற்பனை வரி, சேவை வரி மற்றும் வருமான வரி விலக்கு உண்டு.
  • அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும்.
  • அதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மறு முதலீடு என்ற பெயரில் சலுகை நீடிப்பு செய்யப்படும்.
  • “ஏழை அழத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்”
  • இம்மண்டலத்தை உருவாக்கும் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு எவ்வித வரியும் கிடையாது.

சட்ட விலக்கு :

பாதுகாப்பு, தொழிலாளர் நலச் சட்டங்கள், பஞ்சாயத்து சட்டங்கள் உள்ளிட்ட 27 வகைகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர் வேலை, காண்டிராக்ட் என்ற பெயரில் வருடத்திற்கு ஒரு முறை நீட்டித்துக் கொள்ளவும் எட்டு மணி நேர வேலை பாதுகாப்பு மருத்துவ பாதுகாப்பு என சட்ட ரீதியான எந்த பாதுகாப்பும் இம்மண்டலத்தில் செல்லுபடியாகாது.

அரசுக்கு இழப்பு :
அரசின் இச்சிறப்பு பொருளாதார மண்டல கொள்கையினால் அரசுக்கு
ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி வருமான இழப்பு ஏற்படும் என ரிசர்வ் வங்கி மற்றும் நிதித்துறையே அறிவித்துள்ளது. இது ஒரு எச்சரிக்கை மணியாகவும் அரசுக்கு உள்ளது. ஆனால் அரசு இம்மண்டலத்தின் மூலம் எதிர்பார்க்கும் மூலதனம் ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி மட்டுமே என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

வேலை ஏய்ப்பு :
வர்த்தகத்துறை இம்மண்டலத்தின் மூலம் வேலை வாய்ப்பு உருவாகும் என அறிவித்தது. ஆனால் 2006 வரை செயல்பட்டு வரும் 28 சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 5 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக மிகக் குறைந்த 1 லட்சத்து 650 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கேரளா – கொச்சினில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 7 ஆயிரம் தொழிலாளர்களே பணிபுரிகின்றனர்.

தொழிற்பேட்டைகள் அம்போ :
அந்நிய முதலீடு என்ற பெயரில் இம்மண்டலம் ஒரு கேள்விக்குறியாக அமையப்பெற்றுள்ளது. இதனால் மாநில அரசுகளால் ஆங்காங்கே துவக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டைகளை அரசு சட்டை செய்வதில்லை. தமிழகத்தில் அம்பத்தூர், கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஓசூர் போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் தொழிற்பேட்டைகளில் சாலை, மின்சார வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. அம்பத்தூர் பேட்டையினை சீரமைத்தால் மட்டும் 1 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 1 லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் வழங்கலாம். எனவே அரசு வேலை வாய்ப்பினை தீவிரப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், இதுபோன்ற பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் நலன் காக்கும் கொள்கைகளை வடிவமைத்துள்ளது.

ரியல் எஸ்டேட் :
சிறப்பு பொருளாதாரம் மண்டலம் அமைக்கும் நிறுவனங்கள் தாங்கள் கையகப்படுத்தும் நிலங்களில் 25 சதவீதத்தில் தொழிற்சாலையும் 25 சதவீத இடத்தில் சாலை, மின்சாரம் குடிநீர் உள்பட அடிப்படை கட்டமைப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மீதியுள்ள 50 சதவீத இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு உருவாக்கி கொள்ளை லாபம் அடிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அந்நிய முதலீட்டாளர்கள் வரி இல்லாமலே ரியல் எஸ்டேட் பிசினசெய்ய அரசே வழிவகை செய்துள்ளது.

மாநில அரசும் அம்போ :
இச்சிறப்பு பொருளாதார மண்டலங்களை மாநில அரசுகள் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளை சாரும். மத்திய அரசால் உருவாக்கப்பட்ட வளர்ச்சி அதிகாரிகளுக்கு தான் இம்மண்டலத்தினை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளன. இச்சிறப்பு பொருளாதார மண்டலம் அரசுக்குள் அரசாக ; குறிப்பாக செல்வம் விளையாடும் அரசாக செயல்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

கடந்த கால வரலாறு :
இப்படித்தான் இந்திய அரசு இச்சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கின்றது. பனியன் தொழிற்சாலைகள், தோல் பொருள் உற்பத்தி, இறால் மீன் வளர்ப்பு என்று கூறி நாசப்படுத்தியது போதாது என்று இன்று சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படுகின்றது. விளை நிலங்களை தவிர்த்து தரிசு நிலங்களை தந்து இத்திட்டம் நிறைவேற்றலாம் என கூறப்படுகின்றது. ஆனால் இது கூட தரிசு நிலங்களை விலை நிலங்களாக மாற்ற மறுப்பதுதான். இத்திட்டத்தின் உள்ள தொழிற்சாலைகள் அதிநவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டு அவற்றோடு நமது சிறு தொழில் நிறுவனங்கள் போட்டி போட முடியாத சூழல் ஏற்படும்.

சீனாவில்
மேலும் நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும். சீனாவில் இத்திட்டம் 1986-ல் தொடங்கப்பட்டது. அங்கு லாயக்கற்ற தரிசு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அரசே இச்சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கின்றது. இதற்கு
“காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்”
கையகப்படுத்தப்படும் நிலங்கள் அரசுக்கே சொந்தமானது. முதல் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே வரி விலக்கு தரப்பட்டு பின்பு மற்ற நிறுவனங்களைப் போன்று வரி விதிக்கப்படுகின்றது. இம்மண்டலத்திற்காக நிலம் வழங்கும் அனைவரும் பங்குதாரராக ஏற்றுக்கொள்ளப்பட்டு லாபம் தரப்படுகின்றது. இதன் மூலம் அந்நாடு 12 % பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியா – சீனாவினை ஒப்பிட்டு பாருங்கள். இங்கோ கிராமப்புறம் திவாலாகி, விவசாயிகள் நிர்கதிக்கு ஆளாகும் சூழ்நிலை இச்சிறப்பு பொருளாதார மண்டலத்தால் உருவாகியுள்ளது.

அரசிடம் எதிர்பார்ப்பு :
எனவே இம்மண்டலம் அமைக்கும்போது நிலம் கையகப்படுத்துவதற்கான வரையறை உருவாக்கப்பட வேண்டும்.
நிலம் விலை குறித்து அனைத்து தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.
நிலம் தொழிற்பேட்டையாக மாறுகின்றபோது நிலத்தை சார்ந்திருக்கின்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு தரப்படல் வேண்டும் என்ற கோரிக்கையும் இன்று எழுந்துள்ளது. எனவே இதனை கிளர்ச்சி உருவாக்குவதன் மூலமே மாற்றங்களை நாம் உருவாக்க முடியும்.

செய்யுங்கள் :
இம்மண்டலத்திற்கு எதிராய் நாம் செய்ய வேண்டியது என்ன ?

  1. விவசாயத்தினை அடிப்படையாக கொண்டு அதனை வளர்க்கும் சேவை செய்யும் தொழிற்துறை அமைக்க நமது அரசுகளை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்.
  2. நமது மரபு சார்ந்த விவசாய முறைகளை கடைபிடித்து நாம் நிம்மதியாக வாழ அரசை எதிர்த்து ஆர்ப்பரிக்க வேண்டும்.
  3. வணிக நலன்களை கட்டிக் காக்கும் சுய உதவிக்குழுக்களுக்கு பதிலாக சுய சார்பை உயர்த்திப்பிடிக்கும் சுய உதவிக்குழுக்களை உருவாக்கும் விதமாக தெரு, வார்டு, கிராமம், வட்டம், மாவட்டந்தோறும் குழுக்களே நிர்வகிக்கும் பொருளாதார மண்டலங்களை உருவாக்கலாம் என அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.
  4. எந்த தொழிலினை தொடங்கவும் அப்பகுதி மக்களின் கருத்துக்களை கேட்கும் மக்களை மய்யப்படுத்தும் “அதிகார மய்யம்” உருவாக்க அரசை கேட்க வேண்டும்.

எஸ்.அசோக்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
ஜெயங்கொண்டம்

மரம் நடுவோம் ! மழை பெறுவோம் !!

“மரம் வளர்ப்போம்”, “இயற்கையைக் காப்போம்”, “இயற்கையை நேசி” “இயற்கையோடு வாழ்வோம்” இதுபோன்ற சொல்லடைகள் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன. காரணம் புவி வெப்பம் அடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது. இதனை தவிர்க்கவே மனித மனங்கள் இயற்கை பக்கம் வேகமாக திரும்பியிருக்கின்றது. எனவே புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க வேண்டும். இது இன்றைய இன்றியமையாத அவசியமாகயிருக்கின்றது. எனவே “வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்ற நிலைமாறி “ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்” என்று பேசும் நிலைக்கு வந்துள்ளோம். எனவே இன்று இயற்கை அழிவை காக்க, வெப்பம் தவிர்க்க முதற்காரணியாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்ற உணர்வை பெறுவோம்.

“இன்றிருக்கும் நிலையே தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாகும் என்பதில் சந்தேகமில்லை” என்று ஓர் ஆய்வு கட்டுரையில் படித்தேன். எனவேதான் இத்தகைய அவல நிலையை போக்க அரசு, பல தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் மரம் வளர்க்கும் பல ஏற்பாடுகளை செய்கின்றன. அவ்வப்போது விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்தி வருகின்றன.

“மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்” இது ஒவ்வொருவர் மனதிலும் ரீங்காரமிட வேண்டிய சொல்லாகும். மரங்கள் இயற்கையின் கொடை, இவைகள் பூமித்தாய் என்ற முதல் குழந்தைகள். இதை நாம் அழிக்க கூடாது. மாறாக அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஏனெனில் இயற்கையன்னை அனைத்தையும் நமது நலனுக்குத்தானே தந்து கொண்டிருக்கிறாள்.

நலம் தரக்கூடிய நம்மை, வாழ வைக்கக்கூடிய மரங்களை இயற்கை செல்வங்களை நாம் அழிக்கலாமா ? அழிக்கக் கூடாது. இன்று நடப்பது என்ன ? இயற்கை அழிக்கப்படுகிறது, மரங்கள் கொலை செய்யப்படுகின்றன. மணல் அள்ளப்படுகின்றன.

விவசாய நிலம் வாழுமிடமாக (பிளாட்) மாறுகிறது. அதனால் தான் நாம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். (எ.கா.) சுனாமி, நிலநடுக்கம், அதிக வெப்பம், புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் நாம்தான் பாதிக்கப்படுகின்றோம். ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. “நாம் எந்தளவு இயற்கையை நேசிக்கிறோமோ, அதைவிட பன்மடங்கு இயற்கை நம்மை நேசிக்கும்.

“ஆற்றிலே போட்டாலும் அளந்துபோடு”

அதுபோலவே இயற்கையை நாம் அழிக்கும்போது அதன் சீற்றமும் பன்மடங்காகத்தான் இருக்கும். இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். மரம் நடுவதன் அவசியத்தை நாம் தெரிந்து கொள்வோம்.

மரங்களினால் கிடைக்கும் நன்மைகள் :

1. தொழில்நுட்பங்களால் ஏற்படும் மாசு நிறைந்த சூழலை மரங்கள் தூய்மைப்படுத்தும்.

2. மரங்கள் தூய்மையான காற்றை வழங்கும்.

3. மரங்கள் வெப்பம் தணிக்கும்.

4. மரங்கள் பறவைகளின் சரணாலயம்.

5. மரங்கள் மண் அரிப்பை தடுக்கும்.

6. நிலத்தடி நீரைக் காக்கும்.

7. முக்கியமாக மழை பெய்ய பெரிதும் உதவுகின்றன.

8. பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளை தருகின்றன.

9. மருந்தாக பயன்படுகின்றன.

10. அழகு தரும் மர வேலைபாடுகளுக்கு உதவுகின்றன.

11. இயற்கை உரம் தருகின்றன.

12. இயற்கை சீற்ற அழிவை தடுக்கின்றன.

13. வீடு, கட்டடங்கள் கட்ட பயன்படுகின்றன.

14. நோய் தடுப்புக்கு உதவுகின்றன.

எனவே அன்பர்களே !

மரங்களை வளர்ப்போம் !

காடுகளை உருவாக்குவோம் !

மழை பெறுவோம்.

“பசுமையான தமிழகம் உருவாக்குவோம்.

இது நம்மால் முடியும்”

உங்களாலும் முடியும். செய்வீங்களா ? நம்புகிறேன். நீங்க நிச்சயம் ஒரு மரமாவது நடுவீங்க.

தொகுப்பு : குடந்தை அல்ஃபி

மதங்களின் பார்வையில் பெண்கள்…

தற்போது நிலவுகின்ற சமூக அமைப்பினை நியாயப்படுத்தவும், கட்டிக் காப்பதற்கும் மட்டுமே மதங்கள் பயன்படுகிறது என்ற கருத்து சமூக சிந்தனையாளர்களிடம் உள்ளது. ஆனால் அதையும் தாண்டி  ஆணாதிக்க கருத்துக்களையும் மதங்கள் கொண்டுள்ளது.

இந்து மதத்தில்..

காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் பெண்களை இழிவுபடுத்தி கதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்ய இந்து தர்மம் “பெண்கள் வேதம் ஓதுதல் கூடாது. யாகம் செய்தல் கூடாது. துறவறம் காணவும் கூடாது. மேலும் பெண்கள் அச்சத்தின் விளைவாக பிறந்தவள் ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்டு  அடக்கி ஆள வேண்டியவள்” என கூறுகிறது.
மனுதர்மமோ “பெண்கள் சிறு வயதில் பெற்றோரையும், முதுமையில் பிள்ளைகளையும் இளமையில் கணவனையும் சார்ந்து வாழ வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது.
வர்ணாசிரம தர்மமோ “கர்ப்ப கிரகத்தில் நுழைய பெண்களுக்கு அனுமதியில்லை. இயற்கையான மாத விடாய் தீட்டாகும்” என கூறுகின்றது.
ஆனால் இதற்கு அப்பால் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாடுகளில் பெண்கள் சம உரிமை பெறுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதுதானே உழைக்கும் மக்களின் தனி அம்சமாக உள்ளது.

கிறிஸ்தவ மதத்தில்…

பெண்ணால் உருவானதே பெரும்பாவமும், பெருஞ்சாபமும் ஆகும். அதனால் பெண்களை என்றும் அவர்களின் கணவன் ஆட்சி செய்வான் எனக் கூறுகிறது. எடுத்துக்காட்டாக சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் 11,14 ம் அதிகாரங்களில் பெண்ணடிமை சாசனமே படைக்கப்பட்டுள்ளது.
திருச்சபை நிர்வாகத்தில் கூட ஆண்களே அதிகாரம் உள்ளவர்களாக உள்ளனர். சமயச் சடங்குகளில் கூட பெண்கள் முன்னுரிமை பெறுவதில்லை.

முஸ்லீம் மதத்தில்…

பெண்கள் சமயக் குருக்களாக, ஆக முடியாது. தொழுகையில் பங்கு பெற முடியாது. பெண்கள் அழகையோ. அணிகலன்களையோ வெளிப்படையாக காட்டக் கூடாது. இதனால் தான் இந்திய முஸ்லீம் பெண்கள் “பர்தா” முறையினை பின்பற்றுகின்றனர்.
ஓர் ஆண் தலாக் ! தலாக் ! தலாக் ! என மூன்று முறை கூறினாலே பெண் விவாகரத்து செய்யப்படுகிறாள். ஆனால் பெண்களுக்கு இந்த உரிமையில்லை. முஸ்லீம் பெண்கள் பிற ஆடவருடன் பேசக் கூடாது என தடை செய்யப்படுகிறாள்.

வாழ்க்கையெனும் தத்துவம்

தற்போது இருக்கும் நிலையிலிருந்து தான் விரும்பும் நிலைக்கு வர முயற்சி செய்யும்போது, எதிர்ப்படும் நிலையான போராட்டம்தான் வாழ்க்கையாகும். ‘எதிலிருந்து தொடங்குகிறது வாழ்க்கை ; எங்கு முடிகிறது’ என்ற சிந்தனை மனதில் எழும்ப வேண்டும். சிந்தனையின் உயிர்ப்பு இல்லையயனில் மனித வாழ்க்கை இறந்த நிலைக்கு ஒப்பாகும். தன்னைப்பற்றி முடிவில்லாத எண்ணற்ற சுயசிந்தனைகள் வாழ்க்கையாக பரிணமிக்கிறது. “ஒருவன் எப்படி இறந்தான் என்பதைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். இதைவிட அவன் எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம். ஆனால் அதைப்பற்றி நாம் ஒருவரும் பேசுவதில்லை” என்கிறார் சாமுவேல் ஜான்சன். மனிதனால் பறவையைப் போன்று காற்றில் பறக்க முடியும். மீன்களைப் போன்று தண்ணீரில் நீந்த முடியும். ஆனால் மனிதனைப் போன்று அவனால் சில நேரங்களில் நடந்து கொள்ள முடிவதில்லை.

வாழ்க்கையில் எப்போதும் வாய்மூடி மெளனம் காக்க வேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால் சில நேரங்களில் விசுவரூபம் எடுக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் முத்திரை பதிக்க முடியும், மனதில் உறுதியும், வாக்கினில் இனிமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், வாழ்க்கையின் உயர்வுக்கு வித்திடக்கூடியதாகும்.

ஒரு நேர்காணலுக்கு பல இளைஞர்கள் வந்திருந்தனர். வந்திருந்தவர்களில் எல்லாம் வடிகட்டிப் பார்த்தபோது கடைசியாக இரண்டே இரண்டு இளைஞர்கள் மட்டும் மிஞ்சினார்கள். இருவரும் தகுதிகளைப் பொறுத்தவரையில் சரிநிகர் சமானம் பெற்றவர்களாக விளங்கினார்கள். வல்லுநர் குழு முடிவாக இருவரிடமும் ஒரே ஒரு வினாவைக் கேட்டது. உங்களுக்கு இந்த வேலை கிடைக்கவில்லையயனில் எப்படி உணருவீர்கள் ? முதல் இளைஞன், “நான் கொடுத்து வைத்தது இவ்வளவுதான் என்று நினைப்பேன்” என்று பதில் சொன்னான். நீ போகலாம் என்று வல்லுநர் குழுவினர் கூறினர். இரண்டாவது இளைஞன் அதே வினாவிற்கு “நீங்கள் கொடுத்து வைத்தது இவ்வளவுதான் என்று நினைப்பேன்” என்று மறுமொழி கூறினான். நீ வேலையில் சேரலாம் என்று ஒருமித்த குரலில் உடனே வேலை வாய்ப்பை வழங்கினர் வல்லுநர் குழுவினர். கூர்மையாகச் சிந்தித்துப் பார்த்தால், இரண்டு இளைஞர்களும் சொன்ன வினா விடைகளில் உள்ள வேறுபாடு உங்களுக்குப் புலனாகும். ‘நான் கொடுத்து வைத்தது இவ்வளவுதான்’ என்று நம்பிக்கையில்லாமல் விரக்தியான ஒரு மனநிலையில் மறுமொழி சொன்னான் முதல் இளைஞன். ஆனால் இரண்டாவது இளைஞன் நம்பிக்கை ததும்பி நிற்கும் வண்ணம் எழுச்சி மிக்க மனநிலையோடு, “நீங்கள் கொடுத்து வைத்தது இவ்வளவுதான்” என்று உரைத்தான்.

இந்த நிகழ்விலிருந்து நம் வாழ்வு மலர வேண்டுமென்றால், அமைதியுடனும், நம்பிக்கையுடனும் செயல்படுவதிலே மாபெரும் சக்தி மறைந்திருக்கிறது. முதல் இளைஞனிடம் அவநம்பிக்கையும், உபயோகமற்ற எண்ணங்கள் இருந்ததினால் அவன் வேலை வாய்ப்பை இழந்தான். வாழ்க்கை என்பது ஒரு பயணம், அது வீடு அல்ல. வாழ்க்கை என்பது நீண்ட சாலை, அது நகரம் அல்ல. நமக்கு கிடைக்கும் இன்பங்களும், மகிழ்ச்சிகளும் சாலையில் இருக்கும் பயணியர் விடுதிகள், அங்கு நாம் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு மீண்டும் வாழ்க்கையெனும் பயணத்தை தொடங்குகிறோம்.
ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கு உரிய வாய்ப்பு கட்டாயம் வரும். அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது என்று கவியரசு கண்ணதாசனின் ஆசிரியர் வகுப்பில் அடிக்கடி கூறுவாராம். உண்மையில் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வைர வரிகள் இவை. இன்னும் வாய்ப்பு வரவில்லையே என்று, மூடிய கதவையே பார்த்து முணுமுணுத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஒரு பக்க கதவுகள் மூடியிருந்தால் என்ன ? இன்னொரு பக்க கதவுகள் திறக்கும் ; வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்திலேயே  காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்காமல், கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் கூர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், உரிய வாய்ப்பை நாம் உருவாக்கிக் கொண்டு வாழ்க்கையில் தெளிவாகவும், உறுதியாகவும் காலடி எடுத்து வைத்தால் நம் வாழ்வு மலரும் என்பது திண்ணம்.

எம்.சி.குமார் எம்.ஏ., எஃபில்., பி.எட்.,
விரகாலூர்

இயற்கை வேளாண்மை

உலகத்துக்கே உணவு “படைக்கும்” விவசாய மக்களுக்கு பசுமையான வணக்கம்
வானம் பேஞ்சிக் கெடுக்கும், இல்லேன்னா
காஞ்சிக் கெடுக்கும்.
இது நமது நாட்டு பழமொழி.
ஆம். காலம் தவறிய பருவமழை,  ஒரே நேரத்தில் கடும் தொடர் மழை, கடுமையான காற்று, புயல், வெள்ளம் இப்படியாக விவசாயம் பாதிக்கப்படும். அல்லது  மழையே இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பொய்த்து போகும். இதுதான் விவசாய நிலைமை. பயிர் அறுவடை காலங்களில் தேவையில்லாமல் மழை பெய்து விவசாயி கண்ணீரோடு கடனாளியாக மாறும் நிலை தொடர் கதையாகவே உள்ளது. எனவேதான் நமது இந்திய நாட்டு விவசாய முறையை “சூதாட்டம்” என்பார்கள்.
இது இப்படி இருக்க நம்ம விவசாயிகள் விவசாயத்திற்கு அளவுக்கு அதிகமாக பணம் செலவு செய்கின்றனர். நவீன இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பயிர் பாதுகாப்பு, நீர், அறுவடை இப்படியாக இவைகளுக்கு அதிக செலவு செய்யவேண்டிய நிலை உள்ளது. ஆனால் செலவினங்களை கணக்கிடும் போது விவசாய வருமானம் குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் நாம் விவசாயத்தில் சுய சார்பு தன்மையை இழந்து மற்றவர்களை (உர கம்பெனி, கருவிகள்) சார்ந்து விவசாயம் செய்கின்றோம்.  மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் வளர்ப்பு, நீரை பாதுகாக்கும் முறைகள், (நீர் மேலாண்மை) பயிர் சுழற்சி முறைகள் இவைகள் பற்றி விவசாயிகளுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. இதை கற்றுக்கொடுக்க வேண்டிய வேளாண்மைத் துறையும், அரசும் கண்டு கொள்வதே இல்லை.
பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம் விவசாயத் துறையையும் விட்டு வைக்கவில்லை. நிலங்கள் எல்லாம் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு அரசே நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.
“சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டம் வழியாக விளை நிலங்கள் அழிக்கப்பட்டு பெரும் முதலாளிகளின் வர்த்தக தளங்களாக நிலம் மாறி வருகின்றது.
எனவே பெரும் திரளாக விவசாயிகள் கூடி நமது நிலைமையை பேச வேண்டிய தருணம் வந்துவிட்டது. நமது விவசாய முறையை நமக்காக மாற்றி மரபு விவசாய
முறையை கடைபிடிக்க வேண்டிய கட்டாயமும் வந்துவிட்டது.
இந்த இதழில் “அமுத கரைசல்” அதாவது பயிர் ஊக்கி தயாரிப்பது பற்றி காண்போம்.
         பசுமாட்டு சாணம் 10 கிலோ
ஹோமியம் 10 லிட்டர்
வெல்லம் 2 கிலோ
தண்ணீர் 100 லிட்டர்
இவைகளை ஒரு நீர் தொட்டி அல்லது பிளாஸ்டிக் பெரிய கேனில் போட்டு கரைசலாக்க வேண்டும். 6 மணிக்கு ஒரு தடவை வலமிருந்து இடம், இடமிருந்து வலம் கலக்கி விடவேண்டும். ஒரு நாள் கழித்து நமது கரைசலை பாசன வாய்க்காலில் லேசாக தண்ணீருடன் கலந்து பாய்ச்சலாம். கன்றுகள், காய்கறி செடிகள் இவைகளுக்கு குடிநீர் ஊற்றும்போது இக்கரைசலை கொடுக்கலாம். சொட்டுநீர் பாசனத்திலும் பாசனக் குழாய் வழியாகவும் பயிர்களுக்கு கொடுக்கலாம். இக்கரைசல் 1 ஏக்கர் நிலத்திற்கு உரியது. கடலை, நெல், வாழை, கரும்பு, வெற்றிலை, உளுந்து போன்ற பயிர்களுக்கு இக்கரைசலை பாசனம் மூலம் பயிர் ஊக்கியாக கொடுக்கலாம்.
பயன்கள் :
1. நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய மூன்று சத்தும் சரிசம விகிதத்தில் பலன் கொடுக்கும். (தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து)
2. மண் வளம் பெருகும். மண்புழுக்கள் மேல் நோக்கி வரும்.
3. மண்ணில் அதிகமாக பரவும். இதனால் பயிர் அடர்த்தி பெருகும்.
4. காய்ப்பு பருவத்தில் மணிகள் அதிகமாக பெருகும்.
5. பயிர்களுக்கு பயன் தரும் பூச்சிகளை வளர்க்கும்.
6. குறைந்த செலவில் பயிர்களுக்கு லாபம் தரும் ஊட்டச்சத்து (TONIC) ஆகும்.

D.A. ஜார்ஜ், ஒருங்கிணைப்பாளர்
KMSSS

தேர்தல் நேரமிது – சிந்திக்கும் காலமும் இது…!

நமது நாட்டின் 15-வது பாராளுமன்றத்தை அமைக்க வரும் மே 13 ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நேரத்தில் நாம் சிலவற்றை சிந்திப்போம்.

  1. மதசார்பின்மை என்று வெளியில் பேசிக்கொண்டாலும் சாதி, மத ரீதியாக மக்கள் உணர்வுகளை தூண்டி ஒட்டு மொத்த வங்கிகள் உருவாக்கப்படுகின்றன.
  2. கட்சிகளின் பிரிக்க முடியாத ஒன்றாக கள்ள கருப்பு பணம் உள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் இவ்வளவு தான் செலவு செய்ய வேண்டும் என்ற விதி இருந்தாலும் அளவுக்கதிகமாக கருப்பு பணம் செலவழிக்கப்படுகிறது.
  3. அண்மைக் காலங்களில் துப்பாக்கிகளைக் கொண்டு தேர்தல் நடத்தப்படுகிறது.
  4. தேர்தல் வன்முறை, ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டுப் போடுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது.
  5. ஜனநாயகம் சூதாட்டமாகவே மாறிவிட்டது. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை கடத்துவது மற்றும் விலை பேசுவது, சீட்டுக்கு பசையுள்ள நபர்களா என்று பல்ஸ் பிடித்து பார்ப்பது போன்ற நாடகங்கள் மலிந்துவிட்டது.
  6. கட்சிகள் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முயற்சி எடுப்பதில்லை. தேர்தல் 
  7. காலங்களில் பொய்யான வாக்குறுதிகள், அன்பளிப்புகள், கவர்ச்சி போன்றவற்றை காட்டி ஓட்டு வேட்டை நடத்தப்படுகிறது.
  8. உறவு நேற்று ; எதிர்ப்பு இன்று என்ற நிலையில் பதவிக்காக அணி மாறும்
  9. நிலையில் உள்ளன,  ஆட்சியை பிடிக்க போட்டி போடும் அரசியல் கட்சிகள்

    சிந்திப்போம் ! வாக்களிப்போம் !
    சிறந்தோரை தேர்ந்தெடுப்போம் !
     அம்மு

    போகுற போக்குல !

    அம்மா பசிக்குது
    சோறு போடுங்க
    தயவுடன் கேட்டார்
    வயதான பிச்சைக்காரர்.
    இங்க சோறுமில்ல
    ஒன்றும் இல்ல
    போய்யா என அதட்டினார்
    வீட்டுக்கார பெரியவர் !
    பிச்சைக்காரர்
    ஏக்கமுடன் நிற்க
    உள்ளிருந்து
    தாய்மையுடன் ஒரு குரல்
    இருங்க அய்யா !
    சோறுடன் வந்தாள் ‘அம்மா’
    அழுக்குப் பாத்திரத்தில்
    சோறு வாங்கி கொண்ட
    பிச்சைக்காரர்
    எங்கே அம்மா
    கூட்டு பொரியல்,  அப்பளம் என திரும்ப கேட்க,
    அம்மாவுக்கு கோபம் வந்தது,
    விக்கிற விலைவாசியில
    நீ இதையும் கேட்ப,
    இதற்கு மேலயும் கேட்ப
    போய்யா என சீறினார்.
    ஏம்மா ! விலைவாசி ஏறுனதுக்கு
    நான்தானா காரணம்
    விவரமாக சொல்லுறேன் கேட்டுக்கம்மா.
    உலகப்பொருளாதாரம் – சந்தை மயம்
    தனியார்மயம் – தாராளயமயம்
    உலக மயம் – திட்டம் பல வந்துருச்சி.
    அமெரிக்க டாலர்
    நம்ம உப்பு விலையை கூட
    உயர்த்திடுச்சு.
    பதுக்கலும் அதை
    பாதுகாக்கும் “அரசு” தாம்மா காரணம்

    தேவையில்லாத இலவசத் திட்டம்
    ஆடம்பரமான அரசு விழாக்கள்
    திட்டங்கள் வழியாக ஊழல் !
    கட்சிகளின் மாநாடு – விரயச் செலவுகள்.

    மக்களை மயக்க மானியம்
    நாட்டின் வருமானம்
    இப்படியாக வீணாகும் போது
    அதை சரிகட்ட

    அரசாங்கம் வரியைத்தான் கூட்டுவாங்க. வரிகள் ஏறும்போது
    பொருட்களின் விலை உயரும்
    என்பதுதானம்மா பொருளாதார விதி.
    இதையயல்லாம்
    யாரும்மா கேட்கிறது…
    அதனால விலைவாசி ஏற்றத்துக்கு
    ஆளும் அரசும்
    ஆளப்படும் நம் மக்களும் தானம்மா பொறுப்பு…
    இதையயல்லாம் பேச
    நீ யாருன்னு கேட்குறீங்களா ?
    நானும் இந்த நாட்டுல
    ஓட்டு போட்ட
    ஒரு பிச்சைக்கார பிரஜையம்மா…
    என பெரிய விரிவுரையாற்றி…
    நகர்ந்தார் அந்த வயதான
    பிச்சைக்காரர்
    போகுற போக்குல…
    செய்திகள் சொல்லி கொண்டே…

    G.லிண்டே, 
    கங்கைகொண்டசோழபுரம்.

    மழை நீர் சேமிப்பு

    “நீரின்றி அமையாது உலகு” என்றார் திருவள்ளுவர். சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்றார். இவ்வாறு நீரின் இன்றியமையாமையையும் நீர் தருகின்ற மழையின் சிறப்பினையும் தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் போற்றி வந்துள்ளனர்.
    அனைவருக்கும் அடிப்படைத் தேவை தண்ணீர். ஒரு நாட்டினுடைய வலிமையும், பெருமையும் கூட நீர் வளத்தால் கணிக்கப்படுகின்றது. இதற்கு மாற்று என்பது இல்லாத காரணத்தால் தண்ணீரை நாம் ஒரு தாய்க்கு ஒப்பாக போற்றுகின்றோம். ஓரிடத்தில் மக்கள் வாழத் தொடங்குவதும், வாழ்க்கையை தொடருவதும் அங்குள்ள நீர் வசதியைக் கொண்டுதான் அமைகின்றது.
    மழைநீர் வீணாக்கிவிடாமல் நிலத்துக்குள் அதனைச் செலுத்தி சேமிப்பதை மழைநீர் சேமிப்பு எனலாம். நிலத்தடி நீர்  குறைவதை தடுக்கவும், நீர் வளத்தை பெருக்கவும், நீரின் தரத்தை உயர்த்தவும், கடலோரப் பகுதிகளில் கடல் நீர் நிலப்பகுதியின் கரையைத் தாண்டி உட்புகுவதைத் தடுக்கவும் நிலத்தடி நீரை சேமிக்கிறோம். மேலும் வறட்சி காலங்களில் கால்நடைகளை பராமரிக்கவும் இந்த மழை நீர் அதிகம் தேவைப்படுகிறது. பக்குவமாகச் சேமித்து சிக்கனமாக செலவு செய்வது அறிவார்ந்த செயலாகும்.

    சேமிக்கும் முறைகள் :
    பயிரிடும் முறைகளை மாற்றியும், பாசன வழிமுறைகளை மாற்றியும், நீரை பயன்படுத்துகின்ற முறையினையும் பெரிய அளவில் நீரை சேமிக்கலாம்.
    ஏரி, குளங்களை ஏற்ற முறையில் தூர் வாரி, பாதுகாத்து நீர் வழிகளை அடைக்காமல் பரவலாகப் பெய்கின்ற மழைநீர் முழுவதும் நீர் நிலைகளை வந்தடைய ஆவன செய்ய வேண்டும். வீடுகளில் மழை நீரை சேமிப்பதற்கு சேமிப்புத் தொட்டிகளை அமைத்து வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை மெழுகிய தளமாக மாற்றாமல், மணற்பாங்காகவோ இயல்பான நிலப்பரப்பாகவோ விட்டுவிடுதல் வேண்டும். மாடியில் விழுகின்ற மழை நீரைக் குழாய்கள் மூலம் தரைப்பகுதிக்கு கொண்டு வந்து கிணற்றுக்கும், வீட்டு சுவருக்கும் இடையில் உள்ள நிலப் பகுதியில் ஒரு தொட்டி அமைத்துச் சேமிக்க வேண்டும். கிணறுகள் இல்லாத வீடுகளில் சிறு கால்வாய் மூலம் வடிகட்டும் தொட்டிக்குள் மழைநீரை பாய்ச்சி அங்கிருந்து கசிவுநீர்க் குழாய் வாயிலாகக் ஆழ்குழாய்க் கிணற்றுக்குள் செலுத்தி சேமிக்கலாம்.

    பயன்கள் :
    பெய்த மழைநீரைத் தகுதியான வழிகளில் தேக்கி வைத்துப் பாதுகாப்பதால் நீர் வளத்தைப் பெருக்கலாம். இயற்கை வளங்களைப் பெருக்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், மாசுக் கட்டுப்பாட்டையும் பெறலாம். வளிமண்டல ஓசோன் பாதிக்காதவாறு காக்கலாம். அடை மழையினால் புறநகர்ப் பகுதிகளிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் மழைநீர் வெள்ளமாய்ப் பெருகி வீணாவதைப் தடுக்கலாம். இன்றைய சேமிப்பு நாளைய தேவை என்பதற்கேற்ப பருவ மழையானது பெய்யாது பொய்க்கும்போது ஏற்படுகின்ற தண்ணீர் தட்டுப்பாட்டையும் கடும் பஞ்சத்தையும் மழை நீர் சேகரிப்பால் ஈடுகட்ட முடியும்.

    இறுதியாக :
    நம் நாடு மிகப் பெரிய வளம் நிறைந்த பூமி ஆகும். காடுகள், மலைகள், ஆறுகள், தரிசு நிலங்கள், கடல்கள், பெரிய ஏரிகள் போன்ற இயற்கை வளம் கொண்ட நம் திருநாட்டில் மழை பெய்கின்ற நாட்களில் அதனை சேமித்தால் மேற்கண்ட வளம் மேலும் பெருகும். இமயம் முதல் குமரி வரை வற்றாது வளம் சுரக்கும் பெரிய ஆறுகள் அன்று முதல் இன்று வரை ஓடிக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் மூலக் காரணம் மழையே.
    உயிரின் உறைவிடம் உடல். மழைநீரின் உறைவிடம் நிலம்.  எனவே நிலத்தடி நீரைப் பாதுகாத்து சேமித்து வைப்பதன் வாயிலாக நீண்ட காலத்திற்குத் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கலாம்.
    விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் மழைநீர் சேமிப்பில்  ஈடுபட வேண்டும். மழைநீரை சேமித்து காத்து, பக்குவமாக செலவிட்டு மண் வளம், மனித வளம் காத்து நாடு செழிக்க நாம் வளர முயற்சிகள் எடுப்போம்.

    G.மீரா,
    கங்கைகொண்டசோழபுரம்