தகவல் அறியும் உரிமைச் சட்டம்
கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணம்
இல்லையேன்னும் அறிவுமில்லார்
மனித உரிமைகள்
எல்லா மனிதர்களும் சுதந்திரமாக பிறந்தவர்கள், சம உரிமை உடையவர்கள், பகுத்தறிவும், உள்ளுணர்வும் கொண்டவர்கள் (சுதந்திரமாக பிறந்து சாதி, மதம், கட்சிகள் என்னும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார் ஜேக்குஸ் ரூசே) எனவே சக மனிதர்களிடம் சகோதரத்துவ உணர்வுடன் நடக்க கடமைப்பட்டவர்கள் என்கிறது மனித உரிமைக்கான உலக சாசனம்.
மனித உரிமைகளின் பிரிவுகள் :
1. குடி உரிமைகள் (Civil Rights)
2. அடிப்படை உரிமைகள் (Fundamental Rights)
3. மனித உரிமைகள் (Human Rights)
குடி உரிமைகள் என்பது அந்தந்த நாட்டு அரசு அந்தந்த குடிமக்களுக்கு வழங்கும் உரிமையாகும்.
அ. வாழ்வுரிமை – பிறந்த இடத்தில் வசிக்க வழங்கப்பட்டுள்ள உரிமை.
ஆ. சுதந்திர உரிமை – பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் இவற்றில் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
இ. சித்திரவதை செய்யப்படுவதிலிருந்து சுதந்திரத்திற்கான உரிமை – இன்னல்கள் ஏற்படும் பொழுது அதிலிருந்து மீள உரிமை.
ஈ. சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படும் உரிமை – பாமர குடிமகன் முதல் முதல் குடிமகன் வரை சமமாக நடத்தப்படும் உரிமை.
உ. பாகுபாட்டிற்கு எதிரான உரிமை – சாதி, மதம், இனம், மொழி ஆகிய பாகுபாடுகளுக்கு எதிரான உரிமை.
ஊ. தேசியத்தை சார்ந்திருக்கும் உரிமை – எந்த மதத்தில் பிறந்தவராக இருந்தாலும் பிறந்த தேசத்தை சார்ந்திருக்க உரிமை.
அரசியல் உரிமை :
அ. கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை – ஒருவர் தாம் சொல்ல விரும்பும் கருத்தை அச்சமின்றி வெளிப்படுத்தும் உரிமை.
ஆ. சுதந்திரமாக கூட்டம் கூட்டும் உரிமை – சட்டத்திற்கு உட்பட்டு.
இ. இயக்கங்களை கட்டி எழுப்பும் உரிமை.
ஈ. வாக்களிக்கும் உரிமை – 18 வயதிற்கு நிரம்பியர் தான் விரும்புகின்ற நபருக்கு வாக்களிக்க உரிமை.
உ. அரசியலில் ஈடுபட உரிமை.
பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் :
அ. வேலை பெறும் உரிமை – தன் தகுதிக்கேற்ப அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பெறும் உரிமை.
ஆ. வேலையை தேர்ந்தெடுக்க உரிமை – தான் விரும்புகின்ற தொழிலை, வேலையை தேர்வு செய்யும் உரிமை.
இ. சொத்துரிமை – தன் சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்துகளை உரிமையாக்கிக் கொள்ளும் உரிமை.
ஈ. போதுமான ஊதியம் பெறும் உரிமை – உழைப்பிற்கேற்ற ஊதியம் கோர உரிமையுண்டு.
உ. கல்வி பெறும் உரிமை – அடிப்படை கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி வரை பெற உரிமை.
ஊ. குடும்பத்தை உருவாக்கும் உரிமை.
எ. சமூக பாதுகாப்பு பெறும் உரிமை – உயிர், உடமைகளுக்கு பாதுகாப்பு கோரும் உரிமை.
ஏ. காப்பீடு செய்து கொள்ளும் உரிமை – தன்னுடைய உயிருக்கும், உடமைகளுக்கும் காப்பீடு செய்ய உரிமை.
ஐ. மருத்துவ உதவி பெற உரிமை.
ஒ. சட்டத்தின் வழியில் ஒவ்வொருவரும் போராடவும் ஒன்று கூடவும் உரிமையுண்டு.
அடிப்படை உரிமைகள் (Fundamental Rights)
அடிப்படை உரிமைகள் என்பது அந்தந்த நாட்டிற்கு மட்டும் பொருந்தக் கூடியது. நமது அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 14 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் வழங்கி இருக்கிறது.
1. பிரிவு 14-18 சமத்துவ உரிமை (Rights to equality)
2. 19 – 22 சுதந்திர உரிமை (Right to Freedom)
சுதந்திர உரிமை என்பது பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் என விரிவான விளக்கம் பெறுகிறது. அவைகள்
19(1) a பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டு சுதந்திரம் (Freedom of speech & Expression)
19(1) b ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் (Freedom of Form Assembly)
19(1) c சங்கம் அமைக்கும் சுதந்திரம் (Freedom of Form association)
19(1) d இந்தியா முழுவதும் சென்று வரும் சுதந்திரம் (Freedom of Reside and Settle)
19(1) e இந்தியா எங்கும் தங்கி வாழும் சுதந்திரம் (freedom of profession, occupation, Trade or business)
19(1) f தொழில், பணி, வணிகம் செய்யும் சுதந்திரம் (freedom of profession, occupation, Trade or business)
3. பிரிவு 23 – 24 சுரண்டலுக்கு எதிரான உரிமை (Rights to fight against Exploitation)
4. பிரிவு 25 – 28 சமய சுதந்திர உரிமை (Rights to freedom of Religion)
5. 29 – 30 கலாச்சார மற்றும் கல்வியியல் உரிமை (Cultural and educational Rights)
6. அரசியலமைப்பு தீர்வு வழிகள் (Rights of constitutional Remedies)
7. கருத்து சுதந்திரம் (Rights to Expression)
மனித உரிமைகள் (Human Rights)
மனித மாண்பு எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அல்லது மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் அவர்களின் மாண்பை காக்கும் உரிமையே மனித உரிமைகளாகும். இது எந்நாட்டவருக்கும், உலகெங்கும் பொருந்தக் கூடியதாகும்.
மனித உரிமை என்பது ஒற்றை பரிமான நிலையில் நோக்காமல் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சார உரிமைகளோடு இணைத்துப் பார்க்கின்ற பன்முக பார்வையாகும்.
மனித உரிமை என்னும் கட்டமைப்பை சூழ்ந்து குடிமக்கள், மக்கள் இயக்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக பொருளாதார மேம்பாடு, மத்திய மாநில அரசுகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என உள்ளது. இவைகளுக்கு மத்தியில் மனித உரிமைகளை காப்பது, செயல்படுத்துவது என்பது கடினம் என்றாலும் மனித உரிமைகளை பெறுவது நமது கடமையாகும். மனித உரிமைகளைப் பற்றி பேசும் போது, அதற்காக அரசிடம் போராடும் பொழுது பயங்கரவாதி அல்லது தீவிரவாதி என்று கூறி அடக்குமுறை கையாளப்படுகிறது.
காவல் துறையை பற்றிய மனித உரிமைகள் :
– கைது செய்யும் பொழுது அதற்கான காரணம் சொல்ல வேண்டும்.
– கைதுக்கு கைவிலங்கு போட நீதிபதியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
– 16 வயதிற்கு கீழ் உள்ள ஆண் / பெண் சிறுவர்களை விசாரணை என்ற பெயரில்
இருக்கும் இடத்தைவிட்டு அழைக்கக் கூடாது.
– பெண்களை மாலை 6.00 மணிக்குமேல் கைது செய்யக்கூடாது.
– கைது செய்த 24 மணி நேரத்திற்குள் நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்.
– கைதியை அடிக்கக் கூடாது.
மனித உரிமை சட்டங்கள் :
1993 – மனித உரிமை பாதுகாப்புச் சட்டம். இதில் அரசியல் அமைப்பு சட்டம் 338ன் கீழ் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
1992 – சிறுபான்மையினரின் நலனை பாதுகாக்கும் வகையில் தேசிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
1999 – மகளிர் நல பாதுகாப்பிற்கென தேசிய ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
1950 – மனித வர்த்தகம் சம்பந்தமான பன்னாட்டு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
1923 – தொழிலாளர் இழப்பீட்டு சட்டம்.
1926 – தொழிற்சங்க சட்டம்.
1936 – சம்பள சட்டம்.
1942 – வாராந்திர விடுமுறை சட்டம்.
1946 – தொழில் நிறுவன, வேலை நிலையானைகள் சட்டம்.
1947 – தொழில் தகராறு சட்டம்.
1948 – தொழிலாளர் காப்புறுதி சட்டம்.
1948 – தொழிற்சாலை சட்டம்.
1948 – குறைந்தபட்ச சம்பள சட்டம்.
1952 – தொழிலாளர் சேமநிதி சட்டம்.
1966 – பீடி, சிகரெட் தொழிலாளர்கள் வேலை நிபந்தனைகள் சட்டம்.
1971 – மருத்துவ முறையில் கருச்சிதைவு சட்டம்.
1976 – சம ஊதிய சட்டம்.
1986 – சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்.
1993 – பயங்கரவாத தடுப்பு சட்டம்
1994 – மனித உறுப்புகள் மாற்று சட்டம்.
போன்றவை உருவாக்கப்பட்டுள்ளது. “சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீல் வாதம் என்பது ஒரு விளக்கு அது ஏழைகளுக்கு எட்டாதது” என்றார் பேரறிஞர் அண்ணா.
ஆம். மனித உரிமைகள் பாதுகாப்பிற்கென்று தனித்தனி ஆணையங்களும், நீதி மன்றங்களும், உரிமை சாசனங்களும், பிரகடனங்களும் எவ்வளவோ உருவான பின்பும் ஆங்காங்கே மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்படும் நிலைதான் இன்றளவும் தொடர்கின்றது. இந்நிலை மாற மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்க சங்கங்களாக கூட்டமைப்புகளாக ஒன்றிணைவோம்.
தொகுப்பு : A.சந்தியாகு, KMSSS
கூட்டமைப்பாய் சேர்வோம்!
கடந்த இரண்டு இதழ்களில் கூட்டமைப்பு நம்மிடம் எப்படி உருவாகின்றது? அதற்கு தடையாக உள்ளவை எவை? கூட்டமைப்பாக மாறினால் நாம் அடையும் பயன்கள் என்னென்ன? என்பதனை கண்டோம்…
இவ்விதழில் நமக்கு முன்னோடியான சில இயக்க பண்புகளை காண்போம். இயக்கம் என்றாலே தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதாகும். நாம் தொடர்ந்து இயங்கி செயல்பட்டால்தான் பாதிப்புகளிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும் அல்லது நமக்கான பயன்களை நாம் பெற இயலும்.
நாமும் ஒரு இயக்கமாக மாறி… அல்லது கூட்டமைப்பாக மாறி செயல்பட நல்ல இலக்கு அல்லது குறிக்கோள் காண வேண்டும். நமது கூட்டமைப்பு எதை அடைவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்பதில் தெளிவு வேண்டும். அந்த தெளிவு தான் குறிக்கோளாகும். இலக்கு இல்லாத பயணம் நடு ஆற்றில் துடுப்பு இல்லாமல் பயணிக்கும் படகு போன்றது.
இன்று நாம் ஒரு அமைப்பாக கட்டப்பட்டு விட்டோம். ஆனால் இந்த அமைப்பு எதற்காக என்று எண்ணிப் பார்த்தோமா? நாலுபேர் சேர்கிறார்கள்… வருகிறார்கள் நாமும் தான் சென்று வருவோமே… என்ற எண்ணத்தில் வருகின்றோமா? அல்லது நாலுபேர் என்ற தெளிவான சக்தியோடு நாமும் ஒரு சக்தியாக சேர்ந்து சாதிக்கப் போகின்றோமா? அந்த சாதிப்பு செய்வதற்காக நாம் நமக்குள் ஒரு குறிக்கோளை அல்லது இலக்கை உருவாக்கி இருக்கின்றோமா? “பாரத நாட்டிற்கு சுதந்திரமே” என்ற குறிக்கோளோடு உருவாக்கப்பட்டது காங்கிரஸ் பேரியக்கம். அந்த இயக்கத்திற்கு தெளிவான குறிக்கோள் இருந்ததினால்தான் தியாக சிந்தனையுள்ள; அர்ப்பணிப்பு எண்ணம் கொண்ட உறுப்பினர்கள் இருந்தனர். அதுவே அவர்களை தொடர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிராக போராட்ட உணர்வை வளர்த்தது. பல இழப்புகளுக்கு பிறகு நாம் சுதந்திரம் பெற முடிந்தது. எனவேதான் ‘குறிக்கோள்’ ஒன்றை நாம் உருவாக்குவதன் மூலம் தான் நமது செயல்கள் இருக்கும் என்பதை உணருங்கள்.
ஆம் தோழர்களே! தோழிகளே!… இன்று நாம் உருவாக்கியிருக்கின்ற பெண்கள், விவசாயத் தொழிலாளர்கள் கூட்டமைப்பிற்கு ஒரு தெளிவான பாதை என்ற குறிக்கோளை உருவாக்குங்கள். இந்த குறிக்கோள் நமக்கு நல்ல வழிகாட்டும்… நமது செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்… இந்த இலக்கு நமது பிரச்சினைகளை களையக் கூடிய சமுதாய புரட்சியை உள்ளடக்கியதாக இருக்கட்டும். ஆம் தோழர்களே! தோழிகளே!…
சுரண்டல், பெண்ணடிமை, ஆதிக்க சக்திகளின் நடமாட்டம் போன்றவற்றை அழிக்கும் சமுதாய புரட்சியாக இருக்க வேண்டும்! இருக்கத்தான் வேண்டும்…
‘சமுதாய புரட்சி’ என்பது மரங்களின் கிளைகளை போன்றதன்று; மாறாய் மரத்தின் ஆணி வேரையே ஆட்டி பிடுங்குவதுதான் என உணருங்கள்.
ஆதிக்க சக்திகள் இன்று அரசியல்வாதிகள் என்ற போர்வையிலே… மதவாதிகள் என்ற போர்வையிலே… ஜாதி என்ற அடையாளத்திலே… பாலினம் என்ற உருவத்திலே… இன்று உலா வருகிறது. உணருங்கள்… உயர்த்துங்கள் நம் சமுதாயத்தை… இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘புரட்சித் தீயாக’ உங்களது அமைப்பின் இலக்கு அமைய வேண்டும். ஆதிக்க சக்திகள்தான் இன்று வளர்கிறார்கள். ஏனென்றால் சுரண்டி வளம் காணுவது தானே அவர்களின் இலக்கு…! அவர்களின் இலக்கிலே… தீமையாய் இருந்தாலும் வெற்றி பெறுகிறார்களே! அவர்களே… கயவர்களே வளம் பெறும்போது…! நல்லதற்காக… சமுதாய வாழ்விற்காக நாம் உருவாக்கும் இலக்கில் நாம் வெற்றி பெற முடியாதா? எனவேதான் தோழர்களே! தோழிகளே! இலக்கை உருவாக்குங்கள்… அதை நோக்கி செல்லுங்கள்… வளம் வரும் நம் வாழ்வில்… இயக்கம் என்பதே அர்ப்பணிப்பு தியாக மனப்பான்மையை உள்ளடக்கியது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இந்த பண்புகள் தான் இயக்க வளர்ச்சிக்கு உறுதுணை என்பதை மறவாதீர். நம் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை என்ற காதல் வையுங்கள். அந்த காதல் அர்ப்பணிப்பு, நமது அமைப்பிற்கு என்று ஒரு விதிமுறைகளை வகுத்துக் கொள்ளுங்கள். “நெஞ்சுப் பொறுக்குதில்லையே… இந்த நிலைகெட்ட மானிடரை நினைத்து விட்டால்…” இவ்வரியை பாருங்கள்.
பாதிக்கப்பட்ட நமது நெஞ்சம் குமுற வேண்டும். குமுறல் தான் நல்ல செயல்களுக்கு விடிவாக இருக்கும். கண்ணகியின் குமுறல் மதுரையை எரித்ததா இல்லையா? அந்த குமுறல்தான் ஆக்ரோமாக மாறி போராடத் தூண்டும் என்பதை மறவாதீர். எனவேதான் தோழர்களே!… தோழிகளே! நமது சமுதாயத்தில் நிலவுகின்ற சுரண்டலை பாருங்கள்… சுரண்டிவிட்டு நெஞ்சு நிமிர் நடையினை பாருங்கள்… அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களை பாருங்கள்… அவர்களின் ஆணவப் போக்கை பாருங்கள்… இத்துணையும் நாம் கண்டு கொள்ளாமல் இருப்பதினால் தான் நாம் சுரண்டப்படுகின்றோம்; அதிகாரத்துக்குள் ஆட்பட்டு அல்லல்படுகிறோம். இதற்கு தீர்வு வேண்டாமா?
நேற்று நம் முன்னோர்கள் எப்படி இருந்தார்களோ… அப்படித்தான் இன்றும் நாம் வாழ்கின்றோம்… ஆனால் அதிகார வர்க்கத்தினரோ… ஆண்டுக்கு ஆண்டு லட்சங்களையும் கோடிகளையும் ஈட்டி ‘பதி’களாக காட்சி தருகின்றனர். இதற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும்.
இவையயல்லாம் நம் கண்களுக்கு பிரச்சினையாக ஏன் தெரியவில்லை? இவற்றையயல்லாம் நாம் ஏன் உணர மறுக்கிறோம்?… எனவேதான் ‘சமூக பிரச்சினை’ ஒன்றை கையில் எடுங்கள். குழுவாக அமர்ந்து நமது பிரச்சினைகளை அலசுங்கள். அந்த அலசலின்போது சமூகத்தின் அவலங்கள்; அதில் நம் நிலை; அதனால் நாம் அடைந்த மோசடிகள் அல்லது தீமைகள் தெரியவரும். இதனால் நாம் பாதிக்கப்பட்டதும் அறிய முடியும்
இதன் மூலம் போராட முடியும். நம்மில் உள்ள ஜனசக்தி என்ற ஆயுதம் மூலம் போராட்ட களத்திற்கு வாருங்கள். ஜனசக்தி திரட்ட பொதுவுடமை கருத்துக் கொண்ட அமைப்புகளையும் அணுகினால் அவர்கள் உதவுவர். போராட்டம் வேகம் பெறும். புறக்கணித்தவர்கள் நம் கோரிக்கையை நிறைவேற்றுவர். நம் வாழ்வில் ‘வளம்’ காண வழி பிறக்கும் என்பதை மறவாதீர்.
பல இயக்கங்கள் இம் முறையை பின்பற்றிதான் நமது சமுதாயத்திற்கு நல்லதை செய்துள்ளனர் என்பதை மறவாதீர். அந்த இயக்கத்தில் ஒன்றாக நமது கூட்டமைப்பும் ஏன் மாறக் கூடாது? எண்ணுங்கள் தோழர்களே! தோழிகளே!…
புதிய சமுதாயம் படைக்க இயக்கமாக உள்ள நம் கூட்டமைப்பால் தான் முடியும். அந்த அமைப்பு அல்லது இயக்க சிந்தனையை அசைபோடுங்கள். அசைக்க முடியாத நம்மை எவரும்…! சார்ந்து வாழ்வதே வாழ்க்கை – நம்மை சார்ந்தவர்களுக்காக; நமக்காக போராட மறுப்பது ஏன்?
இயக்கங்களாக உருவாக்கம் பெறுவது சாதனைகள் செய்வதற்காகத் தான் என்பதை மறவாதீர்கள். அந்த சாதனை செய்யும் இயக்கமாக நமது கூட்டமைப்புகள் மாற வேண்டுமானால் நமது பகுதிகளிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க கையில் எடுங்கள். எடுப்பீர்கள் நம்பிக்கை நமக்கும் உள்ளது.
அந்த நம்பிக்கை நம் மனதில் ஆழமாக இருக்கட்டும். அடுத்த இதழில் சந்திப்போம்…
எஸ்.அசோக்குமார்
ஒருங்கிணைப்பாளர்,
ஜெயங்கொண்டம்.