துள்ளி சென்றே பயிலும் வயதில்
துடைக்க வந்துவிட்டான் – மேசை
துடைக்க வந்துவிட்டான் – ஐயோ !
கொல்லன் உலையாய்க் கொதிக்கும் நெஞ்சில்
கொட்டி எரித்துவிட்டான் – ஆசையைக்
குறைவறப் போக்கி விட்டான்
கண்ணைத் திறந்தே உலகைக் காட்டும்
கல்வியை இழந்துவிட்டான் – சோகக்
கதையாய் உருவெடுத்தான்
அன்னை தந்தை ஏற்றிய சுமையை
அரும்பில் சுமக்கிறான் – துயரில்
ஆழ்ந்து நெளிகின்றான்
எட்டாக் கிளையில் கிட்டாக் கனியாய்
இருக்கும் கல்வியினை – உண்டால்
இனிக்கும் நல்லமுதைத்
தொட்டுப்பிடித்துச் சுவைத்து மழைத்
துணைவருவார் யாரோ ? – இவன்
துயர்தீர்ப்பார் யாரோ ?
வி.ஜெனிட்டா